மன்னார் காற்றாலைத் திட்டம் ; நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தல்
மன்னார் காற்றாலை திட்டம் தொடர்பில் பொது மக்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் மதகுருமார்களுடன் கலந்துரையாடுவது அவசியம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மக்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தக் கூடிய திட்டங்களை முன்னெடுக்க கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.
அதேநேரம், மன்னார் காற்றாலை திட்டத்துக்கான ஜனாதிபதி செயலாளரின் உத்தரவு மக்களின் விருப்பங்களை நேரடியாக பாதிப்பதாக அந்த பதிவில் சுட்டிகாட்டியுள்ளார்.
இதனிடையே, அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்துக்கு எதிராக காவல்துறையினர் கடுமையாக நடந்துக்கொண்டமையை கண்டிப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியில் இருந்த போது, வெளிநாட்டு முதலீடுகளை எதிர்த்து குரல் கொடுத்த தேசிய மக்கள் சக்தி, தற்போது ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இத்தகைய திட்டங்களை முன்னெடுப்பதை கண்டிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.