யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த பெருந்திருவிழா ; பக்தி பரவசத்தில் களைகட்டும் நல்லூர்
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா திங்கட்கிழமை (17) காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ள நிலையில், நல்லூர் ஆலயத்தின் முக்கிய தோரண வாசல் வளைவுகளில் சேவல் கொடி நாட்டும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (16) பக்திபூர்வமாக இடம்பெற்றது.
இதன்படி, ஞாயிற்றுக்கிழமை மதியம் சுமார் 12 மணியளவில் நல்லூர் செம்மணி பகுதியில் முதலாவது சேவல் கொடி நாட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, நல்லூரின் தெற்கு மற்றும் வடக்கு வாசல் வளைவுகளிலும் சேவல் கொடிகள் சிறப்பாக நாட்டப்பட்டன.

நல்லூர் கந்தனின் பெருந்திருவிழாவை வரவேற்கும் வகையிலும், ஆலயத்தைச் சூழவுள்ள வெளி வீதிகளை திருவிழாக் கோலத்தில் அலங்கரிக்கும் வகையிலும் இந்த சேவல் கொடி நாட்டும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பக்தர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டதுடன், நல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதும் திருவிழா ஏற்பாடுகளுடன் களைகட்டத் தொடங்கியுள்ளன.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா திங்கட்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், அன்றுமுதல் நல்லூர் சுற்றுவட்டாரம் முழுவதும் ஆன்மிக மற்றும் பக்தி உணர்வுடன் விழாக்கோலம் பூணும் என எதிர்பார்க்கப்படுகிறது.