15 இலங்கை மீனவர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்த நாடு!
மியன்மார் கடல்பகுதியில் கைப்பற்றப்பட்ட இரு இலங்கை மீன்பிடிப் படகுகளின் 2 சாரதிகளுக்கு அந்நாட்டு நீதிமன்றம் தலா 5 வருட கடூழியச் சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜனக பண்டார இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த இரண்டு மீன்பிடிப் படகுகளிலுமிருந்து கைது செய்யப்பட்ட 13 இலங்கை மீனவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்து தீர்ப்பளித்ததாக தூதுவர் தெரிவித்தார்.
மியன்மாரில் கைது செய்யப்பட்ட 15 மீனவர்கள் மீதும் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
குடிவரவு சட்டங்களை மீறி மியான்மர் கடற்பரப்புக்குள் பிரவேசித்தமை, மியன்மார் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தமையும் அமைந்திருந்ததாகவும் ஜனக பண்டார தெரிவித்தார்.
15 மீனவர்களும் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, மியன்மார் நீதிமன்றம் இந்தத் தண்டனையை விதித்துள்ளது.
எவ்வாறாயினும், பொது மன்னிப்பின் கீழ் மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தூதுவர் கூறினார்.
மீனவர்கள் நலமுடன் இருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.