எந்தவொரு சூழ்நிலையிலும் என்னுடைய பயணம் நிற்கப்போவதில்லை
எந்தவொரு சூழ்நிலையிலும் என்னுடைய பயணம் நிற்கப்போவதில்லை என யாழ் நகர முதல்வர் மணிவண்ணன் தெரிவித்தார்.
யாழ்.மாநகரை துாய்மையாக பேணும் ஒரு நன்நோக்கில் எம்மால் முன்னெடுக்கப்பட்ட முன்மாதிரியான நடவடிக்கை தொடர்பில் தவறான வியாக்கியானம் செய்து என்னை பொலிஸார் கைது செய்தபோது எனக்காக குரல் கொடுத்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றிகளை கூறிக்கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“துாய்மையான நகரம், துாய்மையான கரங்கள்” என நாங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு அமைவாக நடந்து கொள்வதே யாழ்.மாநகர மக்களுக்கான எனது பணியாகும்.
அந்த பணியை செம்மையாகவும், முன்மாதிரியாகவும் செய்வதற்கு எடுத்த முயற்சியை மிக தவறாக வியாக்கியானம் செய்து என்னை கைது செய்தார்கள்.
மிக நெருடலான அந்த சூழலில் மக்கள், உள்நாட்டு வெளிநாட்டு அரசியல் தலைவர்கள், சட்டத்தரணிகள், துாதுவராலயங்கள், ஊடகங்கள், புலம்பெயர் உறவுகள், நண்பர்கள், ஆதரவாளர்கள் எனக்காக கொடுத்த குரல் எனக்கு ஆறுதலளித்தது மட்டுமல்லாமல் என்னை பிரம்மிப்பில் ஆழ்த்தியது என்ரும், என்னுடைய பயணம் மிக நேர்மையாது வெளிப்படையானது அது மக்களுக்கானது எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் பாதை எப்படியானது என்பதை தெரிந்து கொண்டுதான் பயணத்தையே ஆரம்பித்திருக்கிறேன். ஆதாலால் எந்தவொரு சூழ்நிலையிலும் என்னுடைய பயணம் நிற்கப்போவதில்லை எனவும் யாழ் மாநகர முதல்வர் தெரிவித்துள்ளார்.