யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலை; சந்தேக நபர்கள் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு!
யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் தயாளனி திலீபனின் கொலை வழக்கை யாழ்.நீதவான் நீதிமன்றம் எதிர்வரும் 16ஆம் திகதிக்கு திகதியிட்டுள்ளது.
அது வரையில் சந்தேகநபர்களான படுகொலையானவரின் மகளையும் மருமகனையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் வெளியிட வேண்டும்
கடந்த 18ஆம் திகதி விரிவுரையாளர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் 21ஆம் திகதி தனங்கிளப்பு பகுதியில் உள்ள பற்றைக்காட்டிற்குள் இருந்து சடலம் மீட்கப்பட்டது.
சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகன் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். இன்றைய தினம் வியாழக்கிழமை வரையில் இருவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
இந்நிலையில் குறித்த வழக்கு , யாழ்.நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் (2) வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேக நபர்களான மகளும் மருமகனும் மன்றில் முற்படுத்தப்பட்டதனை தொடர்ந்து வழக்கு விசாரணைகள் இடம்பெற்றன.
அதன் போது, நீதிமன்ற விசாரணைகளில் தலையீடு செய்வது போன்றும் , நீதிமன்றை அவமதிப்பது போன்றும் சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களில் தகவல்கள் , செய்திகள் வெளியாகியமை தொடர்பில் சந்தேக நபர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் ஆதாரங்களுடன் தமது கடும் ஆட்சேபனைகளை மன்றில் முன் வைத்தனர்.
அத்துடன் சந்தேகநபரான மகளை உளநல வைத்தியர் முன் முற்படுத்தி உளநல சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதுடன் , உளநல ஆலோசனைகளை பெற மன்று அனுமதிக்க வேண்டும் எனவும் கோரி இருந்தனர்.
அதனை அடுத்து, சந்தேகநபரான பெண்ணை , உளநல சிகிச்சை பெற அனுமதித்த மன்று , ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செய்திகளை வெளியிட வேண்டும் எனவும் மன்று அறிவுறுத்தியுள்ளது.
சந்தேகநபரான பெண்ணை , உளநல சிகிச்சை பெற அனுமதித்த மன்று , ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செய்திகளை வெளியிட வேண்டும் எனவும் மன்று அறிவுறுத்தியுள்ளது.
மேலும் வழக்கை எதிர்வரும் 16ஆம் திகதிக்கு திகதியிட்டதுடன் அன்றைய தினம் வரையில் சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறும் யாழ்.நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.