திருமணமாகி இரு வாரங்களில் பெண் பலி ; துயரத்தில் உறவுகள்
களுத்துறை, பண்டாரகம பிரதேசத்தில் திருமணமாகி இரண்டு வாரங்களே ஆன நிலையில், இளம் பெண் பொறியியலாளர் விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் மதுஷானி பத்திரண என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நில்லையில் உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள் பலரது உயிர் காக்க தானம் செய்யப்பட்டுள்ளன.

பெண்ணின் உடல் உறுப்புகள் பலரது உயிர் காக்க தானம்
கடந்த 21ஆம் திகதி, மதுஷானியின் தந்தைக்கு மருந்து வாங்குவதற்காக கணவனுடன் பத்தேகமவிற்கு முச்சக்கர வண்டியில் சென்றுள்ளார்.
அன்றிரவே மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, கணவனுக்கு ஏற்பட்ட நித்திரை தூக்கத்தினால் முச்சக்கர வண்டி மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் மதுஷானியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு மாற்றப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி கடந்த 24ஆம் திகதி அவர் உயிரிழந்தார்.
“மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதே அவரது வாழ்நாள் ஆசையாக இருந்தது. இன்று அவரது உறுப்புகள் மூலம் பல உயிர்கள் வாழும்” என அவரது கணவர் சதுரங்க அல்விஸ் மிகுந்த வேதனையுடன் தெரிவித்தார்.
மதுஷானி தனது பாடசாலைக் காலத்திலிருந்தே ஏழை மாணவர்களுக்கு உணவு மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கி வந்துள்ளார். அத்துடன், தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கான பத்திரத்திலும் அவர் ஏற்கனவே கையெழுத்திட்டிருந்தார் என அவரது கணவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.