காதல் விடயங்கள் மோசடி ; யாழ்.கூட்டத்தில் அமளி துமளியால் வெளியேறினார் ஸ்ரீதரன் எம்.பி
யாழ். ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தனிப்பட்ட விடயத்தை முன்னிறுத்தி இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதால் சில நிமிடங்கள் அமளிதுமளி ஏற்பட்டது.
தனிப்பட்ட அரசியல் விவகாரங்கள் மற்றும் தனிநபர் அவதூறுகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் ஒருங்கிணைப்பு குழு தலைவருக்கு இல்லாமையை சுட்டிக்காட்டி கூட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் வெளியேறினார்.
காதல் விடயங்கள், மோசடி
வலி. வடக்கில் முன்னெடுக்கப்படும் மின் இணைப்பு விடயம் தொடர்பாக விவாதம் முன்வைக்கப்பட்டது.
அப்போது, ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான இளங்குமரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அவர்களது தனிப்பட்ட விடயங்களை முன்னிறுத்தியதாக மாறியது.
குறிப்பாக இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் மற்றவரது காதல் விடயங்கள், மோசடி மற்றும் பெண்களை ஏமாற்றியமை, நிதி மோசடிகள் உள்ளிட்ட பல விடயங்களை முன்னிறுத்தி நூற்றுக்கணக்கான அதிகாரிகள் முன்னிலையில் குடும்பச் சண்டையிட்டனர்.
இந்நிலையில் குறித்த விவாதத்தை இடை நிறுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஒருங்கிணைப்பு குழு தலைவரிடம் வலியுறுத்தினார். ஆனால் ஒருங்கிணைப்பு குழு தலைவர் குறித்த இருவரையும் கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருந்தார்.
ஒருங்கிணைப்பு குழு தலைவரின் ஆளுமையற்ற நிலையை அவதானித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கூட்டத்தை விட்டு வெளியேறி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.