மாடுகளின் வாய்க்குள் வெங்காய வெடி வைத்து வாய் சிதறடிப்பு ; ஸ்ரீதரன் சினம்
புத்த பெருமான் போதித்த காருண்யம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு , மாதவனை பகுதிகளில் மீறப்பட்டு வாய் பேச முடியாத மாடுகளுக்கு வாய்க்குள் வெங்காய வெடியை வைத்து வாயை சிதறடிக்கின்றீர்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (2023.11.14) இடம்பெற்ற வரவு -செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முதல் நாள் குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இனப்படுகொலை
காலை இழந்த ஒரு இராணுவ வீரர் தான் இவ்வாறான கொடூரத்தை செய்கின்றார். மயிலத்தமடு , மாதவனையில் பெரும் பாவத்தினை இந்த நாடு செய்து கொண்டிருக்கின்றது என்று தெரிவித்த அவர், இலங்கையில் சமாதானத்தின் கதவுகள் இறுக மூடப்பட்டுள்ளன.
நல்லிணக்கத்தின் கதவுகளுக்கு ''சீல்'' வைக்கப்பட்டுள்ளது.பௌத்தத்தை பின்பற்றுகின்ற , புத்தரின் பெயரால் விகாரைகளை அமைக்கின்றனர், அவரின் பெயரினால் இந்த நாட்டில் அநியாயங்களுக்கு எல்லாம் முடி சூட்டுகின்ற பிக்குமாரைக்கொண்டுள்ள இந்த நாட்டில் கருணையும் அஹிம்சையும் யாரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை.
மீண்டும் இந்த நாட்டில் துன்பங்கள் துயரங்கள் நடைபெறாது அல்லது இந்த நாட்டில் மீண்டும் தமிழ் மக்கள் வஞ்சிக்கப்படமாட்டார்கள்,அவர்கள் மீது நடந்த இனப்படுகொலை மீண்டும் நறைபெறமாட்டாது.
அவர்கள் மீது நடந்த போர்க்குற்றங்கள் இனியும் நடக்காது என்று சொல்வதற்கான, மீள நிகழாமை தொடர்பான எந்த உத்தரவாதங்களும் இந்த நாட்டில் இல்லை எனவும் கூறினார்
இங்கு நல்லிணக்கத்துக்காக சொல்லப்பட்டுள்ள வரவு-செலவுத்திட்ட வார்த்தை ''வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம் வழங்க அரசு பலகோடி ரூபா ஒதுக்கீடு'' என்பதாகும்.
இறந்துபோன உயிர்களுக்கு, காணாமல் போனவர்களுக்கு நீங்கள் காசால் விலை பேசுகின்றீர்களே தவிர அவர்களுக்கு என்ன நடந்தது, இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் ஒப்படைக்கப்பட்டவர்கள்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை கண்டுபிடிக்க அல்லது மீண்டும் அது நிகழாமலிருக்க இந்த நாட்டின் தலைவர்கள் நியாயமுள்ள மனிதர்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்? என்றும் கேள்வியெழுப்பினார்.