சைபர் மோசடியின் புதிய முகம் ; வீடியோ அழைப்பில் சிறைப்படுத்தப்பட்ட வாழ்க்கை
இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் 'டிஜிட்டல் அரஸ்ட்' (Digital Arrest) எனும் பெயரில் சைபர் கிரிமினல்கள் செய்த சித்திரவதையால், 28 வயது இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மேலதிக விசாரணை
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான இளம்பெண் ஒருவர், ‘டிஜிட்டல் கைது’ எனப்படும் சைபர் மோசடி கும்பலின் மிரட்டலுக்கு ஆளானதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணை தொடர்புகொண்ட மர்ம கும்பல், தாங்கள் காவல்துறை அதிகாரிகள் என கூறி, சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி ‘டிஜிட்டல் முறையில் கைது’ செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதிலிருந்து தப்பிக்க வேண்டுமெனில் யாரிடமும் பேசக்கூடாது என்றும், 24 மணி நேரமும் வீடியோ அழைப்பில் கேமரா முன் இருக்க வேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர்.
பல நாட்களாக நீடித்த இந்த மிரட்டல் மற்றும் பணப் பறிப்பு முயற்சிகள் காரணமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளான இளம்பெண், இறுதியில் தன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தின் கொடுமையை மேலும் வெளிப்படுத்தும் வகையில், அவரது உடல் தகனம் செய்ய சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட நேரத்திலும் கூட, அந்த சைபர் கும்பலிடமிருந்து அவரது கைப்பேசிக்கு தொடர்ச்சியாக வீடியோ அழைப்புகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனைவியின் உடல் தகனம் செய்யப்பட்ட பின்னர், மனவேதனையுடன் இருந்த கணவர் அந்த அழைப்பை எடுத்தபோது, எதிர்முனையில் இருந்தவர்கள் மரணத்தைப் பொருட்படுத்தாமல் அவரையும் மிரட்டும் விதத்தில் பேசியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, வீட்டில் இளம்பெண் எழுதிய தற்கொலை குறிப்பு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் சைபர் கும்பல் தன்னை தொடர்ந்து மிரட்டியும் பிளாக்மெயில் செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக கணவர் காவல்துறையில் முறைப்பாடு அளித்துள்ள நிலையில், சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.