எச்.ஐ.வி. தொற்றால் பாதித்த 9 வயது மகனை கொன்று தாய் தற்கொலை; தொழிலதிபர் வீட்டில் அரங்கேறிய சம்பவம்
ஓசூரில் எச்.ஐ.வி. தொற்றால் பாதித்த 9 வயது மகனை கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் தொழிலதிபர் ஒருவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பரிசோதனையில் எச்.ஐ.வி. எனப்படும் வைரஸ் தொற்று பாதித்து எய்ட்ஸ் நோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எய்ட்ஸ் நோய் பரிசோதனை
இதனையடுத்து, அவரது மனைவியும், அவருடைய பிள்ளைகளும் எய்ட்ஸ் நோய் பரிசோதனை செய்து கொண்டனர்.
அதில் பிளஸ்-2 படிக்கும் மகளுக்கு மட்டும் எய்ட்ஸ் நோய் பாதிப்பு இல்லை என்றும் தாய்க்கும், 9 வயது மகனுக்கும் எய்ட்ஸ் நோய் கணவரிடம் இருந்து பரவி இருந்தது தெரியவந்தது.
இதனால் விரக்தியடைந்த தாய் மகளிடம் நம் வாழ்க்கையே நாசமாகி விட்டது என்று அழுது புலம்பி உள்ளார். மேலும் தங்களுடன் வசித்து வந்தால் பிளஸ்-2 மாணவியான மகளுக்கும் இந்த நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு விடும் என்று அச்சம் அடைந்துள்ளார்.
தானும் மகனும் இதேபோல் உடல்நலக்குறைவால் அவதிப்பட தானே வேண்டும் என்று பலவாறு யோசித்த அவர், ஒரு கட்டத்தில் எய்ட்ஸ் நோய் பாதித்த மகனை கொன்று தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
இரவு உறங்கும் போது அருகில் கிடந்த தலையணையை எடுத்து அசந்து தூங்கிய மகனின் முகத்தில் தலையணையால் அமுக்கி மூச்சு திணற அடித்து கொன்றதுடன் அந்த பெண் தனது சேலையால் அங்கிருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனிடையே பிளஸ்-2 மாணவி நேற்று காலையில் எழுந்த போது, தனது கண் எதிரே தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருந்ததையும், தம்பி இறந்து கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு தொழில் அதிபரும், அக்கம்பக்கத்தினரும் அங்கு விரைந்து வந்தனர். இது தொடர்பாக சிப்காட் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.