பொருளாதார நெருக்கடியிலும் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு ; ஹரிணி அமரசூரிய
எத்தகைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நாட்டின் மனித வளத்தை மேம்படுத்துவதற்காக, வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் கல்வித்துறைக்கு பெரும் தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
காலி, தடல்லை அல்-முபாரக் வித்தியாலயத்தில் கிராம மக்களால் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் விழா நேற்று (13) நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் இதனைப் குறிப்பிட்டார். கல்விச் சீர்திருத்தங்கள் மூலம் பிள்ளைகளுக்கு நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு சேர்க்கும் நோக்கில், அனைத்து இரண்டாம் நிலைப்பாடசாலைகளுக்கும் தலா ஒரு திறன்பலகை (Smart Board) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது 4,000 பாடசாலைகளுக்கு இணைய வசதிகள் வழங்கப்பட்டுள்ளதோடு, இந்த ஆண்டின் இறுதிக்குள் ஏனைய பாடசாலைகளுக்கும் இணைய வசதி வழங்கப்படும் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு உறுதியளித்துள்ளது.
தொழில்நுட்பத்தைப் பிள்ளைகளுக்குச் சரியான முறையில் பயன்படுத்துவதற்காக, ஆசிரியர் பயிற்சி மற்றும் ஒன்றிணைக்கப்பட்ட வகுப்பறைகள் போன்ற வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறைந்த வளங்களைக் கொண்ட இந்த பாடசாலையை ஊர்மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கட்டியெழுப்பியமை ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாகும் என பிரதமர் பாராட்டினார்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தொழில்சார் கல்விப் பிரதி அமைச்சர் நலின் ஹேவக குறிப்பிடுகையில், நாட்டை உருவாக்க வேண்டுமாயின் மனித வளம் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த விழாவில் தென் மாகாண ஆளுநர்,பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.