இலங்கை திறைசேரியில் திருடப்பட்ட பணம்; சைபர் பாதுகாப்பு நிபுணர் எச்சரிக்கை
இலங்கை திறைசேரியின் ஊடாக செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, ஹேக்கர்களின் கைக்குச் சென்றமையானது 'BEC' எனப்படும் நவீன சைபர் தாக்குதல் முறையினாலேயே இடம்பெற்றுள்ளதாக சைபர் பாதுகாப்பு நிபுணர் அசேல வைத்தியலங்கார தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பாரிய நிதி மோசடிகளைத் தடுப்பதற்கான தொழில்நுட்பக் கட்டமைப்புகள் இலங்கையில் உள்ள போதிலும், அவற்றை முறையாகப் பயன்படுத்தாததே இத்தகைய இழப்புகளுக்குக் காரணம் எனவும் சைபர் பாதுகாப்பு நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மின்னஞ்சல் தொடர்புகளுக்குள் ஊடுருவும் ஹேக்கர்கள்
இந்த மோசடி குறித்துசைபர் பாதுகாப்பு நிபுணர் மேலும் விளக்குகையில்,
"தற்போது பரவலாகக் காணப்படும் 'Business Email Compromise' (BEC) எனும் முறையையே ஹேக்கர்கள் இங்கு பயன்படுத்தியுள்ளனர்.
உதாரணமாக, ஒரு நிறுவனம் மற்றுமொரு நிறுவனத்திற்கு மின்னஞ்சல் ஊடாக விலைப்பட்டியலை அனுப்பும் போது, ஹேக்கர்கள் அந்த மின்னஞ்சல் தொடர்புகளுக்குள் ஊடுருவி, வங்கி கணக்கு விபரங்களை மாற்றி அமைப்பார்கள்.
இதன் மூலம் அனுப்பப்படும் பணம் உரிய நிறுவனத்திற்குச் செல்லாமல் ஹேக்கர்களின் கணக்கிற்குச் சென்றுவிடும்" என்றார்.
நிதி அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு முக்கிய கிளையில் இவ்வாறானதொரு பரிவர்த்தனை எவ்வாறு இடம்பெற்றது என்பது கேள்வியாக உள்ளது.
மின்னஞ்சல் பரிமாற்றக் கட்டமைப்புகள் அண்மைக்கால தொழில்நுட்பத்திற்கு அமைய இற்றைப்படுத்தப்பட்டுள்ளனவா , அவற்றுக்கான பாதுகாப்பு மென்பொருட்கள் இடப்பட்டுள்ளனவா மற்றும் அவற்றை நிர்வகிப்பது யார் என்பது குறித்த கட்டமைப்பு ரீதியான சிக்கல்கள் அங்கு காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இலங்கை மத்திய வங்கி, நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் 'ISO 27001' எனும் சைபர் பாதுகாப்பு தரச்சான்றிதழைப் பெறுவதைக் கட்டாயமாக்கியுள்ளது. இதன் காரணமாகவே வங்கித் துறையில் சைபர் தாக்குதல்கள் பெருமளவு குறைந்துள்ளன.
"இந்தத் தரச்சான்றிதழைப் பெறுவதால் மட்டும் ஹேக்கிங்கை முழுமையாகத் தடுத்துவிட முடியாது. ஆனால், அதற்கான பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் மற்றும் வருடாந்த வெளிப்புறத் தணிக்கைகள் மூலம் பாதிப்புகளைக் குறைந்தபட்ச நிலைக்குக் கொண்டு வர முடியும்" என அவர் விளக்கினார்.
நாட்டின் வங்கி முறைமையை விடவும் அதிக நிதிப் பொறுப்புகளைக் கொண்ட திறைசேரி போன்ற நிறுவனங்கள், வங்கிகள் பின்பற்றும் இத்தகைய பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்றியிருந்தால், இந்த 2.5 மில்லியன் டொலர் இழப்பைத் தவிர்த்திருக்கலாம் எனவும் சைபர் பாதுகாப்பு நிபுணர் அசேல வைத்தியலங்கார சுட்டிக்காட்டினார்