இலங்கையில் தொழிலதிபர்களை ஏமாற்றி பண மோசடி ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இலங்கையில் தொழில் தொடங்குவதற்காக உள்நாட்டு தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.300 மில்லியன் மோசடி செய்ததாகக் கூறப்படும் இந்தியப் பிரஜை ஒருவரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதிவான் அசங்க எஸ். போதரகம இன்று (25) உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பான சந்தேகநபரின் வங்கிக் கணக்குகளை விசாரித்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் பிரிவுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சந்தேகநபர் கைது செய்யப்பட்டபோது அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட பல இரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் குறித்த அறிக்கையை பெறவும், சந்தேகநபரின் கையடக்கத் தொலைபேசி குறித்த பகுப்பாய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதிவான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்,
குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர்களாக இலங்கையர்கள் இருவர் செயல்பட்டுள்ளதாகவும், இரண்டு பணிப்பாளர்களில் ஒருவருக்கு சந்தேகநபர் கடன் வழங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
முறைப்பாடளித்த தொழிலதிபர் சந்தேகநபரான இந்திய பிரஜையின் கணக்கில் வரவு வைத்த ரூ. 300 மில்லியனில், ரூ. 150 மில்லியன் மற்றொரு பணிப்பாளரின் வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு பணிப்பாளர்களும் தற்போது பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதன் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதாகவும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்துள்ளனர்
முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த பின்னர், சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.