யாழ். காணி உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ; 11.2657 ஹெக்டயர் காணி அரசாங்காத்தால் சுவீகரிப்பு
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட "தேவதுரவு" பகுதியில் அமைந்துள்ள 11.2657 ஹெக்டயர் பரப்பளவுடைய காணியை பொதுத் தேவைக்காக சுவீகரிக்கும் நடவடிக்கைகளை நில அளவைத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
இதுதொடர்பாக நில அளவைத் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பில், மருதங்கேணி பிரதேச செயலாளரின் 2026 மே 21ஆம் திகதியிட்ட நில அளவைக் கோரிக்கை (இல. VE/SR/2026/27) மற்றும் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் வர்த்தமானி குறிப்பு இல. 4-3/4/2012/D/351 ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருதங்கேணி (ஜே/428) கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட "தேவதுரவு" என அழைக்கப்படும் குறித்த காணி, பொதுத் தேவைக்காக சுவீகரிக்கப்படவுள்ளதாகவும், சுவட்டு வரைபடம் Ya/VDE/2016/36-க்கு அமைவாக காணி சுவீகரிப்புச் சட்டத்தின் பிரிவு 5-ன் கீழ் நில அளவீட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஜூலை 9ஆம் திகதி முதல் தொடர்ந்து வேலை நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை வரை நில அளவீட்டுப் பணிகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காணியின் மீது உரிமை கோரும் நபர்கள், தங்களது உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணங்களுடன் குறிப்பிட்ட நாளில் நேரில் ஆஜராகி, காணி எல்லைகளைச் சுட்டிக்காட்டி நில அளவீட்டுப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நில அளவைத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.