முல்லைத்தீவில் காணாமல்போன சிறுவன் கொழும்பில் கண்டுபிடிப்பு
முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் காணாமல்போன 14 வயது சிறுவன் கொழும்பில் நேற்றையதினம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒட்டுசுட்டான் - இடதுகரை, முத்தையன்கட்டு, பிரதேசத்தை சேர்ந்த 14 வயதுடைய அசோக்குமார் அரவிந்தன் என்ற சிறுவனே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இவர், கடந்த 05 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
அன்றையதினம் வீட்டிலிருந்து வலதுகரையில் உள்ள கடை ஒன்றிற்கு பொருட்கள் வாங்கச் சென்றிருந்த நிலையில் அவர் இதுவரை வீடு திரும்பவில்லை.

சிறுவன் குறித்த கடையில் பொருட்கள் வாங்கிச் செல்வதாக உள்ள CCTV காட்சிகள் பதிவாகியிருந்தது.
இந்நிலையில் காணாமல்போன சிறுவன் கொழும்பில் வைத்து உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தப்பட்டதை தொடர்ந்து உறவுகளால் சிறுவன் நேற்றையதினம் அழைத்து வரப்பட்டார்.
சிறுவனை யாரும் கடத்தவில்லை எனவும் சிறுவன் வேலை தேடி சென்றதாகவும் சிறுவனால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய நிலையம் ஊடாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் பரிசோதனைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் சிறுவனின் ஆரோக்கிய நலன் கருதி மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.