எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதுவரை எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் எவ்வித யோசனையும் முன்வைக்கவில்லை. எதிர்வரும் நாட்களில் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதை அடிப்படையாகக் கொண்டே, உள்நாட்டில் விலைகளைத் தீர்மானிக்கலாம் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை (15) கொழும்பில் உள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எரிபொருள் விலை திருத்தம்
இதுவரை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் எவ்வித யோசனையும் முன்வைக்கவில்லை.
முன்னர் முற்பதிவு செய்யப்பட்ட எரிபொருட்களே தற்போது நாட்டை வந்தடைகின்றனர். இது குறித்து அரசாங்கமும் இன்னும் கலந்துரையாடவில்லை.
எவ்வாறிருப்பினும் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் சில, தற்போதுள்ள விலையில் எரிபொருட்களை விநியோகிப்பதில் நெருக்கடிகளை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளன.
கடந்த 3 மாதங்களாக எரிபொருள் விலையில் அரசாங்கம், நுகர்வோருக்கு சலுகைகளை வழங்கியிருக்கிறது.
இதற்காக 57 பில்லியன் ரூபா அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டது. எதிர்வரும் நாட்களில் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதை அடிப்படையாகக் கொண்டே, உள்நாட்டில் விலைகளைத் தீர்மானிக்கலாம் என்றார்.