வடக்கில் அமைச்சர் நாமலின் பெயரை கூறி அட்டகாசம்; தீக்கிரையாக்கப்பட்ட வீடு!
கிளிநொச்சி A-9 வீதியில் நிதிமன்ற கட்டிடத்திற்கு அருகில் உள்ள அரச காணியை சட்ட ரீதியாக நீண்டநாள் குத்தகையில் பெற்று வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருபவரின் தற்காலிக வீடு , அமைச்சர் நாமலின் ஆட்கள் என கூறிய சிலர் தீவைத்து கொழுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வீடு நேற்றிரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதோடு, உடமைகளுக்கும் சேதமாக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். நாமலின் ஆள் தான் எனக் கூறி வந்த தர்மசிறி என்பவரே இவ்வாறு நடந்து கொண்டதாகவும் கூறும் அவர்கள், சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும் கூறியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் மேலும் கூறுகையில்,
குறித்த காணியினை அபகரிக்கும் முயற்சியில் இதற்கு முன்னரும் பல தடவைகள் நாமலின் பெயரை பயன்படுத்தி எம்மை அச்சுறுத்தி தாக்கியுமுள்ளார். இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளபோதும், பொலிஸார் உரிய நடவடிக்கை எடுப்பதில் அக்கறையின்றி உள்ளதாகவும் விசனம் வெளியிட்டுள்ளார்.
அதேவேளை சம்பவம் தொடர்பிலும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டனர்.
அதோடு நாமல் ராஜபக்ஷவின் ஆட்கள் நாங்கள் என்று கூறிய தர்மசிறி என்ற நபர் நேற்று மாலை எமது இடத்திற்கு வருகைதந்து இந்த காணியில் எந்த அபிவிருத்தியும் செய்யக்கூடாது மீறி செய்தால் வீட்டோடு அனைவரையும் தீயிட்டு கொளுத்தி விடுவேன் என அச்சுறுத்தியதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறு வந்தவர்கள் பொருட்களை சேதப்படுத்தியதோடு, துவக்குகளையும் காட்டி மிரட்டி சென்ற நிலையில் அது குறித்து பொலிஸில் முறைப்படு செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.



