நாமல் ராஜபக்ஷவின் அச்சம் நியாயமானதே; அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ
குற்றம் செய்தவர் தான் செய்த தவறுகளை நன்கு அறிந்திருப்பதாலேயே, கைது நடவடிக்கைகளுக்கு அஞ்சி வாழ்கிறார் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் அச்சம் நியாயமானதே என்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டியில் உள்ள அபயராமய புராண விஹாரையில் நடைபெற்ற 'வேஹி பிரித்' வழிபாட்டு நிகழ்வில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் தாம் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் நாமல் ராஜபக்ஷவுக்கு இருக்குமாயின், அதற்கு முன்னதாகவே ஆதரவாளர்களைத் திரட்டி அவர் கூட்டங்களை நடத்திக் கொள்ளட்டும் என்றும் அமைச்சர் விமர்சித்துள்ளார்.
இதேவேளை, அரசாங்கத்தால் கொண்டுவரப்படவுள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கும் தீர்மானத்தின் அடிப்படையில் பொது வாக்கெடுப்பு (Referendum) நடத்தப்பட வேண்டும் எனக் கூறப்பட்டால், அதனைச் சந்திக்க அரசாங்கம் முழுமையாகத் தயாராகவே உள்ளது என்றும் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெளிவுபடுத்தியுள்ளார்.
இருப்பினும், இந்தச் சீர்திருத்தத்திற்குப் பொது வாக்கெடுப்பு அவசியமாகாது என்பதே அரசாங்கத்தின் கணிப்பு என்றும், இது குறித்த உயர் நீதிமன்றத்தின் உத்தியோகபூர்வ விளக்கம் அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் நாடாளுமன்றத்திற்குத் தெரியப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.