மத்திய கிழக்கு போர் பதற்றம் ; மத்தள வானூர்தி நிலையம் மீண்டும் உயிர்பெறுகிறதா?
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள வான்பரப்பு முடக்கம் மற்றும் போர் பதற்றங்கள் காரணமாக, நட்டத்தில் இயங்கும் மத்தள ராஜபக்ஷ சர்வதேச வானுர்தி நிலையத்தை (MRIA) ஒரு தற்காலிக மையமாகப் பயன்படுத்துவது குறித்து ஆரம்பக்கட்ட ஆலோசனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான விரிவான பேச்சுவார்த்தை நாளை (23) நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கட்டார் ஏர்வேஸ் (Qatar Airways), எமிரேட்ஸ் (Emirates) மற்றும் ஓமான் ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்கள் இலங்கைக்குக் கூடுதல் வானூர்திகளை இயக்கக் கோரிக்கை விடுத்துள்ளன.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் (BIA) நிலவும் இடநெருக்கடி காரணமாக, இந்த மேலதிக விமானங்களை மத்தள வானூர்தி நிலையத்திற்குத் திசைதிருப்ப அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
மத்தள வானூர்தி நிலையம் தற்போது முழுமையான தயார் நிலையில் உள்ள போதிலும், அங்கு ஒரே நேரத்தில் சுமார் 10 சிறிய ரக வானூர்திகளை அல்லது 7 முதல் 8 பெரிய ரக (Wide-body) வானூர்திகளை மட்டுமே நிறுத்தி வைக்க முடியும் என சிவில் வானூர்தி போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
தற்போது மத்தள வானூர்தி நிலையம் ரஷ்யாவின் ரெட் விங்ஸ் (Red Wings) வானூர்தி நிறுவனத்தினால் பயன்படுத்தப்படுவதுடன், சீரற்ற வானிலை காலங்களில் மாற்று வானூர்தி நிலையமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
மத்தள வானூர்தி நிலையம் தற்போது மாதத்திற்கு சுமார் 250 முதல் 300 மில்லியன் ரூபாய் வரை நட்டத்தை எதிர்கொண்டு வருகின்றது.
வானூர்தி நிலையத்தின் நட்டத்தைக் குறைக்கும் நோக்கில், அதன் பராமரிப்புப் பணிகள், சரக்கு கையாளுதல் (Cargo), உணவகம் சேவைகள் மற்றும் வானூர்தி பயிற்சிப் பாடசாலை போன்ற துறைகளை அபிவிருத்தி செய்யத் தனியார் முதலீட்டாளர்களை (EOI) அழைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.