மத்திய கிழக்குப் போர் விடுத்த சவால் ; போத்தல் குடிநீர் விலை உயர்வு
இந்தியாவில் கோடைகாலம் தொடங்கி 45 பாகை செல்ஸியசுக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகி வரும் நிலையில், நிலவும் சர்வதேச போர்ச் சூழல் இந்தியாவின் 6 பில்லியன் டொலர் மதிப்புள்ள போத்தல் குடிநீர் தொழில்துறையை கடும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.
சந்தையில் முன்னணியில் உள்ள பிஸ்லெரி நிறுவனம் தனது விலையை 11 வீதம் உயர்த்தியுள்ளது. இதேபோல் பெய்லி, கிளியர் போன்ற நிறுவனங்களும் விலையை அதிகரித்துள்ளன.
பிளாஸ்டிக் போத்தல்கள் தயாரிக்கப் பயன்படும் PET ரெசின் துகள்களின் விலை, மசகு எண்ணெய் உயர்வால் (ஒரு பீப்பாய் 119 டொலர்) கடுமையாக அதிகரித்துள்ளது. போத்தல் தயாரிக்க உதவும் 'பிரீஃபார்ம்'களின் விலை ஒரு கிலோ 115 ரூபாயிலிருந்து 180 ரூபாயாக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிராவில் உள்ள போத்தல் உற்பத்தி தொழிற்சாலைகளில் சுமார் 20 வீதம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
கண்ணாடி போத்தல்களை உருவாக்கப் பயன்படும் உலைகளை இயக்க இயற்கை எரிவாயு அவசியம். போர் காரணமாக இதன் விநியோகம் 20 வீதம் குறைக்கப்பட்டுள்ளதால், கண்ணாடி போத்தல்களின் விலை 20 வீதம் வரை அதிகரித்துள்ளது.
கண்ணாடி போத்தல்களின் விலை உயர்வால் மதுபானங்கள் மற்றும் மருந்துப் பொருட்களின் விலையை 12-15 வீதம் வரை உயர்த்த அனுமதிக்கக் கோரி நிறுவனங்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்தியாவில் நகர்ப்புறங்களில் 15 வீத வீடுகளும், கிராமப்புறங்களில் 6 வீத வீடுகளும் குடிநீருக்காக போத்தல் நீரையே நம்பியுள்ளன.

கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் நிலத்தடி நீர் மாசு காரணமாக இதன் தேவை அதிகமாக இருக்கும் வேளையில், இந்த விலை உயர்வு சாமானிய மக்களுக்குப் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
அரசாங்கம் எரிசக்தி விநியோகம் சீராக உள்ளதாகத் தெரிவித்தாலும், சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.
மேலும், வானூர்தி எரிபொருள் விலையேற்றம் மற்றும் உரத் தொழில்துறையும் இப்போரினால் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.