பிரியந்தவை தொடர்ந்து வெளிநாடொன்றில் மற்றுமொரு இலங்கையர் படுகொலை; வெளியான அதிர்ச்சித்தகவல்
சீசெல்ஸ் நாட்டில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி சீசெல்ஸின் லாடிகு தீவில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த 47 வயதுடைய இலங்கையர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இம்மாதம் 10 ஆம் திகதி இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவர் அவர் தங்கியிருந்த வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். பல நாட்களாக பணிக்கு வராததால் குறித்த நபர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்ற நிறுவனத்தின் அதிகாரி ஒருவர், அவர் வீட்டின் அறையில் விழுந்து கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
அதன் பின்னர் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டதில் உயிரிழந்திருந்தமையும் தெரியவந்தது.
இதனையடுத்து, இலங்கையரின் கொலை தொடர்பில் அந்நாட்டு பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், இதுவரை சந்தேகத்தின் பேரில் எவரும் அடையாளம் காணப்படவில்லை எனவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
இதேவேளை, அண்மையில் பாகிஸ்தானின் சியல்கோட்டில் இலங்கை முகாமையாளர் பிரியந்த படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 85 சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யும் நடவடிக்கையில் தற்போது பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன், சந்தேக நபர்களுக்கு எதிரான விசாரணை அறிக்கை ஜனவரி 04ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், சந்தேகநபர்களுக்கு ஆதரவாக எந்தவொரு சட்டத்தரணியும் ஆஜராகவில்லை என பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.