புண்ணிய பலன்களை பெறுவதற்கு மாசி மகம் வழிபாடு
பாவங்களை போக்கி, புண்ணிய பலன்களை பெறுவதற்கான முக்கிய நாளாக மாசி மகம் கருதப்படுகிறது. இந்த நாளில் தெய்வங்கள் நீர்நிலைகளில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் செய்வதாலேயே பெரும்பாலான கோவில்களில் இந்த நாளில் தீர்த்தவாரி அல்லது தெப்ப உற்சவம் நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது.
மாசி மகம் அன்று எந்த நேரத்தில், எந்த முறையில் விரதம் இருந்து, வழிபாடு நடத்தினால் நம்முடைய பாவங்களில் இருந்து விடுபட்டு, புண்ணிய பலன்களை பெற முடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மாசி மாதத்தில் வரும் மிக முக்கியமான வழிபாட்டு நாட்களில் ஒன்று மாசிமகம். பொதுவாக நம்முடைய பாவங்களை போக்கிக் கொண்டு, புண்ணிய பலன்களை பெறுவதற்காகவே கோவில்களில் குளங்கள், தீர்த்தங்கள் ஆகியவை ஏற்படுத்தப்பட்டன.
அதனாலேயே புனித நீராடல் என்ற ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது. அதிலும் சில குறிப்பிட்ட நாட்களில் புனித நீராடுவது மிக அதிகமான பலன்களை தரும். அப்படி ஒரு அதிகமான புண்ணிய பலன்களை தரக் கூடிய நாள் தான் மாசி மகம்.
இந்த நாளில் புனித நீராடினால், புண்ணிய நதிகளில் நீராடிய பலன்களையும், பாவங்களில் இருந்து விடுபட்டு, புண்ணிய பலன்களை பெறுவதற்கான பலன்களையும் பெற முடியும்.
மாசிமகம் வழிபாட்டு நேரம்
இந்த மாசிமகம் மார்ச் 12ம் திகதி புதன்கிழமை வருகிறது. வழக்கமாக மாசி மாதத்தில் மகம் நட்சத்திரமும், பெளர்ணமியும் இணைந்து வரும் நாளையே மாசிமகமாக கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மார்ச் 13ம் திகதி தான் பெளர்ணமி வருகிறது.
மார்ச் 12ம் திகதி அதிகாலை 03.53 மணி துவங்கி, மார்ச் 13ம் திகதி காலை 05.09 வரை மகம் நட்சத்திரம் உள்ளது. அதே சமயம் மார்ச் 13ம் திகதி காலை 11.40 மணிக்கு துவங்கி, மார்ச் 14ம் திகதி பகல் 12.57 வரையிலும் பெளர்ணமி திதி உள்ளது.
அதனால் சத்யநாராயண பூஜை செய்பவர்கள் மார்ச் 13ம் திகதி மாலையில் செய்வது சிறப்பு. மாசிமகம் அன்று நீர்நிலைகளுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவதும் சிறப்பானதாகும்.
வழிபாட்டு முறை
மாசிமகம் அனைத்து தெய்வங்களையும் வழிபட ஏற்ற நாளாகும். குழந்தை இல்லாத தம்பதிகள் முருகப்பெருமானை வேண்டிக் கொண்டு நாள் முழுவதம் உபவாசமாக இருந்து விரதம் இருக்கலாம்.
திருமண வாழ்க்கையில் பிரச்சனை இருப்பவர்கள் அம்பிகையை வேண்டி, காலையில் அம்பிகைக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை தினமும் நெற்றியில் வைத்து வர வேண்டும்.
பெருமாளுக்கு அன்றைய தினம் மாலையில் சத்யநாராயண பூஜை செய்து வழிபடலாம். சிவ பெருமானை மனதார நினைத்து வழிபடலாம். இந்த நாளில் குலதெய்வத்திற்கும் பொங்கல் வைத்து வழிபடுவது நல்லது.