பொங்கலிற்கு மாவிலை மாஸ்க்! வைரலாகும் தகவல்
மாவிலை தோரணங்கட்ட மட்டும் அல்ல; மாஸ்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்’ என்று விஜயவாடா இயற்கை விளைபொருட்கள் கண்காட்சியில் ஒருவர் வேடிக்கையாக அணிந்து வந்தது பலரது கவனத்தை ஈர்த்தது.
விஜயவாடாவில் உரம், யூரியா, பூச்சிக்கொல்லி பயன்படுத்தாமல் இயற்கையாக விளையும் தானியங்களைப் பயன்படுத்தினால் பல்வேறு நோய்களிலிருந்து மக்கள் விடுபடலாம் என்பதற்காக இயற்கைப் பொருட்கள் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இயற்கைப் பொருட்கள் பயன்பாட்டிற்கான விழிப்புணர்வு சார்ந்த இந்தக் கண்காட்சியில் மக்கள் ஆர்வத்தோடு பங்கேற்றனர். உடலுக்கு ஊறுவிளைவிக்காத வகையிலான பல்வேறு தானியங்களை அவர்கள் வாங்கிச் சென்றனர்.
அப்போது ஒருவர் தன் கடையை நோக்கி வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வண்ணம் மாவிலைகளைக் கோர்த்து முகக்கவசமாக அணிந்திருந்தார்.
மக்கள் வியப்போடு அவரைப் பார்த்து சென்றனர். உண்மையில் மாவிலைகளை வைத்து முகக்கவசம் அணிவது நடைமுறையில் இல்லாத, அங்கீகரிக்கப்படாத ஒன்று என்பதால் இதனை மக்கள் வேடிக்கையாகவே பார்த்து நகர்ந்தனர்.
எனினும், நாடு முழுவதும் கொரோனா அதிகம் பரவி வருவதால் முகக்கவசம் பற்றிய விழிப்புணர்வு மிகவும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிற இன்றைய சூழலில், ஒருவகையில் இது கொரோனாவுக்கான விழிப்புணர்வாக உள்ளதாகவும் மக்கள் அவரை பாராட்டவும் செய்தனர்.