தமிழர் பகுதியொன்றில் முற்றுகையிடப்பட்ட சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையங்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை இடங்களை சுற்றிவளைத்து தடுக்கும் முகமாக சந்திவெளி பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட சித்தாண்டி சந்தனமடு பகுதி அண்மித்த இடங்களில் இன்று (14) இடம்பெற்ற சுற்றி வளைப்பு தேடுதலில் சந்தேகத்திற்கு இடமான 4 பேர் தப்பியோடியதுடன், 2 வரல்களில் 80 லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படும் 2 தகர வரல்கள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
சித்தாண்டி சமூகமட்ட இளைஞர்கள் மற்றும் சந்திவெளி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்து குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.

விசேட சுற்றிவளைப்பு
குறித்த சுற்றிவளைப்பில் 2 மோட்டார் சைக்கிளில் தப்பியோடிய சந்தேக நபர்கள் 4 பேரும் மாவடிவேம்பு பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
தப்பியோடிய நபர்களைத்தேடி பொலிசார் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவருகின்றனர்.

அண்மைக் காலமாக மாவடிவேம்பு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக சட்டவிரோத கசிப்பு விற்பனை மற்றும் உற்பத்தி இடங்களை தேடி சந்திவெளி மற்றும் ஏறாவூர் பொலிசார் இணைந்து சுற்றிவளைப்பு செய்து கைது நடவடிக்கைகள் இம்பெற்று வருகின்றது.
சுற்றி வளைப்பில் கைப்பற்றபட்ட கசிப்பு மற்றும் பொருட்களை நீதிமன்றுக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சந்திவெளி பொலிசார் தெரிவித்தனர்.
தொடர்ச்சியாக சித்தாண்டி, மாவடிவேம்பு, ஈரளக்குளம் உள்ளிட்ட கிராமசேவகர் பிரிவுகளில் இடம்பெறும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை இடங்களைத்தேடி இடம்பெறும் சுற்றிவளைப்பு இடம்பெறுமென பொலிசார் தெரிவித்தனர்.