வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலயத்தில் இன்று மாம்பழ திருவிழா!
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலயத்தில் வருடாந்த மகோற்சப பெருவிழா இடம்பெற்று வரும் நிலையில் இன்று(7) மாம்பழத் திருவிழா கோலாகலமாக இடம்பெற்றது.
வருடாந்த மகோற்சவத்தின் 22ஆம் நாளான இன்று, சிறப்புமிக்க மாம்பழத் திருவிழா பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.

புராணங்களில் கூறப்படும் மாம்பழக் கதை
முருகப்பெருமானும் விநாயகப் பெருமானும் அற்புதமான அலங்காரங்களில் எழுந்தருளி, ஆலயத்தின் வெளிவீதியில் ஒன்றாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்காட்சி வழங்கினர்.
புராணங்களில் கூறப்படும் மாம்பழக் கதையை அடிப்படையாகக் கொண்ட தத்துவ நிகழ்வு, நல்லூர் ஆலய முன்றலில் கண்முன்னே நிகழ்த்திக் காட்டப்பட்டது. உலகைச் சுற்றி வருமாறு கூறப்பட்டபோது, முருகப்பெருமான் தனது மயிலில் உலகை வலம் வரச் சென்றார்.

அதேவேளை, விநாயகப் பெருமான் தனது தாய் தந்தையரான சிவபெருமானையும் பார்வதி தேவியையும் சுற்றி வணங்கி, “தாய் தந்தையே உலகம்” என்ற தத்துவத்தை வெளிப்படுத்தினார்.
அதன்பின் ஆலய பிரதம குருவினால் விநாயகப் பெருமானுக்கு மாம்பழம் வழங்கப்பட்டது. மயிலில் வலம் வந்த முருகப்பெருமான் மீண்டும் ஆலய முன்றலுக்கு திரும்பியபோது, அண்ணனான விநாயகப் பெருமானின் கையில் இருந்த மாம்பழத்தைக் கண்டு கோபமுற்றார்.

அந்த வேளையில், அலங்கரித்திருந்த ஆடைகளைத் துறந்து, ஆண்டிக் கோலத்தில் முருகப்பெருமான் அருள்காட்சி வழங்கிய , புராணமும் தத்துவமும் கலந்த இந்த அரிய நிகழ்வு காண, பல ஆயிரம் பக்தரகள் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனர்.