யாழில் பொலிஸாரிடம் வாளை காட்டி சண்டித்தனம் ; அதிர்ச்சி கொடுத்த இளைஞனின் பின்னணி
போதைப்பொருளை மீட்க சென்ற பொலிசாரை வாளினை காட்டி மிரட்டிய நபருக்கு எதிராக 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாவகச்சேரி பகுதியில் புதன்கிழமை (12) இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்து சோதனையிட்ட போது , இளைஞனிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் மீட்டிருந்தனர்.

25க்கும் மேற்பட்ட வழக்குகள்
குறித்த இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , நாவற்குழி பகுதியை சேர்ந்த மற்றுமொரு இளைஞனிடமும் போதைப்பொருள் இருப்பதாக பொலிஸாருக்கு இளைஞன் கூறியுள்ளார்.
அதனை அடுத்து குறித்த இளைஞனை கைது செய்யும் நோக்குடன் , நாவற்குழியில் உள்ள இளைஞனின் வீட்டிற்கு பொலிஸார் சென்ற வேளை, வாளினை காட்டி பொலிசாரை அச்சுறுத்தி விட்டு தப்பி செல்ல முற்பட்ட வேளை இளைஞனை பொலிஸார் மடக்கி பிடித்து , கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் மீட்டனர்.
மேலதிக விசாரணைகளில் , யாழ்ப்பாணத்தில் உள்ள நீதவான் நீதிமன்றங்களில் குறித்த இளைஞனுக்கு எதிராக 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதையும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.