பெண்ணுடன் விடுதியில் தங்கிய நபர் திடீர் மரணம் ; பொலிஸார் தீவிர விசாரணை
பதுளை மஹியங்கனை நகரிலுள்ள விடுதி ஒன்றில் பெண்ணுடன் தங்கியிருந்த 46 வயதுடைய நபர் ஒருவர் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்தவர் ஹசலக பகுதியைச் சேர்ந்தவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
அவர், ஹங்குரான்கெத்த பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவருடன் தங்குவதற்காக மஹியங்கனை நகரிலுள்ள விடுதி அறை ஒன்றை முன்பதிவு செய்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, குறித்த நபர் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும், உயிரிழந்த நபரும் அந்தப் பெண்ணும் சமீப காலத்திலேயே அறிமுகமானவர்கள் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அந்த பெண் மஹியங்கனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.