பல பெண்களின் தங்கச் சங்கிலி அறுத்தவர் கைது
மேல் மாகாணத்தில் பல பெண்களின் தங்கச் சங்கிலி பறிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

5 தங்கச் சங்கிலிகளும் பொலிஸாரால் பறிமுதல்
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 5 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 44 வயதான இந்தச் சந்தேகநபர் பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தெஹிவளை, மிரிஹான, கடுவலை, ஹோமாகம, கஹதுடுவ, மொரட்டுவை, வெல்லம்பிட்டிய, நாரஹேன்பிட்டிய, கிருலப்பனை, குருந்துவத்தை மற்றும் முகத்துவாரம் ஆகிய பகுதிகளில் பெண்களின் தங்கச் சங்கிலிகளைப் பறித்த பல சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனத் தேடப்பட்டு வந்த நிலையிலேயே இவர் பிடிபட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும், கொள்ளையடிக்கப்பட்ட 5 தங்கச் சங்கிலிகளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.