சமிக்ஞை விளக்கு கோபுரத்தில் ஊஞ்சலாடிய நபர்; கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் !
கொழும்பு, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உள்ள வீதி சமிக்ஞை விளக்குக் கோபுரத்தின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று , வெளிக்கிழமை (24) காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் குறித்த நபர் பொலிஸாராலும் தீயணைப்புப் படையினராலும் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

திடீரென அறுந்து விழுந்த துணி
அந்த நபர் கோபுரத்தின் உச்சியில் ஏறியதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் கோபுரத்திற்குக் கீழே காற்றினால் நிரப்பப்பட்ட பாதுகாப்பு மெத்தையை தயார் நிலையில் வைத்திருந்தனர்.
சம்பவ இடத்திலிருந்து பெறப்பட்ட காணொளி காட்சிகளின்படி, அந்த நபர் பிடித்துக்கொண்டிருந்த துணி திடீரென அறுந்து விழுந்த போதிலும், அவர் கீழே விரித்து வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு மெத்தையில் விழுந்ததால் எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பினார்.
மீட்புக் குழுவினர் அவரை நோக்கிச் சென்றபோது, அந்த நபர் “தயவுசெய்து என்னை அடிக்காதீர்கள்” எனக் கெஞ்சிய சத்தம் கேட்டது.
அதனையடுத்து, அங்கிருந்த பொலிஸ் அதிகாரிகள் அவருக்குப் பாதுகாப்பு அளிப்பதாக உறுதி கூறி, அவரை அந்த இடத்திலிருந்து அழைத்துச் சென்றனர்.
குறித்த நபர் எதற்காக இத்தகைய செயலில் ஈடுபட்டார் என்பதற்கான காரணத்தை அதிகாரிகள் இதுவரை வெளிப்படுத்தவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.