சுதந்திர சதுக்க வளாகத்தில் அபாயகரமாக காரை செலுத்தியவர் கைது
கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சுதந்திர சதுக்கத்திற்கு அருகிலுள்ள வீதியில் அபாயகரமான முறையில் கார் ஒன்றைச் செலுத்திய இளைஞர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இன்று பிற்பகல் குறித்த வீதியில் நான்கு கார்கள் அபாயகரமான முறையில் செலுத்தப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் திடீர்ச் சோதனை நடத்தி இவர்களைக் கைது செய்ய முற்பட்ட வேளையில் மூன்று கார்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், ஒரு காரைக் கறுவாத்தோட்டம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட காரைச் செலுத்தியவர் 20 வயதுடைய இளைஞர் எனக் குறிப்பிடப்படுகிறது.
இதற்கமைய, சந்தேகநபர் போதைப்பொருள் உட்கொண்டுள்ளாரா என்பதைக் கண்டறிவதற்காக அவரைச் சட்டவைத்திய அதிகாரி முன் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த கார் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக எஞ்சின் கொள்ளளவு கொண்ட வாகனமா என்பதைப் பரிசோதிப்பதற்காக மோட்டார் வாகனப் பரிசோதகரிடம் ஆஜர்படுத்தப்படவுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கறுவாத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.