பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கபடவுள்ள மல்வானை வீடு ; வௌியேறும் பல்கலை மாணவர்கள்
தொம்பே பிரதேச செயலகத்தின் பொறுப்பிலுள்ள மல்வானை பகுதியில் அமைந்துள்ள காணி மற்றும் வீட்டை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைப்பதற்கு பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இன்று (18) பிரதமருடன் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அதன் இணைப்பாளர் சசிந்து பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் உறுதி
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
நடைபெற்ற கலந்துரையாடலில் இக்காணியை கூடிய விரைவில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு மாற்றுவதற்குத் தீர்மானிக்கப்பட்டதால், இந்த நேரத்தில் அந்த வளாகத்தில் இருந்து வெளியேறி செல்வதற்குத் தாங்கள் உள்ளிட்ட குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
மல்வானை காணியை வரும் நாட்களில் கூடிய விரைவில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைப்பதாகப் பிரதமர் உறுதியளித்துள்ளார்.
நாங்கள் கோரிய விடயத்திற்கு அரசாங்கத் தரப்பிலிருந்து ஒரு பதில் கிடைத்துள்ளது.
அந்தப் பதிலைத் தொடர்ந்து, இந்த நேரத்தில் மல்வானை காணியில் இருந்து வெளியேற நாங்கள் தீர்மானித்துள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.