சங்குப்பிட்டி பெண் கொலையில் முக்கிய சந்தேக நபரின் பகீர் வாக்குமூலம்
பூநகரி - சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான யாழ்ப்பாணத்தை சேர்ந்த தவில் வித்துவான் கைது செய்யப்பட்டுள்ளார்.
தவில் வித்துவானை இன்றைய தினம் (4) அதிகாலை வேளை கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் கூறுகின்றன.

அதோடு கொலை செய்ய பயன்படுத்திய காரும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணை
கைது செய்யப்பட்ட நபரை கிளிநொச்சிக்கு அழைத்து சென்று பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். முதல் கட்ட விசாரணைகளின் அடிப்படையில் ,
படுகொலை செய்யப்பட்ட பெண்ணுடன் தவில் வித்தவானுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பழக்கம் ஏற்பட்டு , தொலைபேசி ஊடாக உரையாடி வந்த நிலையில் கடந்த ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதியளவில் யாழ் . மாவட்ட செயலகத்திற்கு அருகில் கார் ஒன்றினை வாடகைக்கு பெற்று , அப்பெண்ணை அழைத்துக்கொண்டு பூநகரி ஊடாக கிளிநொச்சி நோக்கி பயணித்துள்ளனர்.
அதன் போது, பூநகரி பகுதியில் அப்பெண்ணுக்கு குடிப்பதற்கு , குளிர்பானம் வழங்கியதை அடுத்து அப்பெண் மயக்கமடைந்த நிலையில் ,அவரை கொலை செய்து கடலில் வீசியதாகவும் , பின்னர் தான் கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதிக்கு சென்று தடய பொருட்களை அழித்து விட்டு , யாழ்ப்பாணம் திரும்பியதாக சந்தேக நபர் விசாரணைகளில் தெரிவித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன .

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் , படுகொலை செய்யப்பட்ட பெண் அணிந்திருந்த சுமார் 10 பவுண் நகையை சுன்னாகம் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து 17 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்று , அப்பணத்தினை தனது சொந்த தேவைகளுக்காக செலவழித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் குறித்த தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்த நகைகளை பொலிஸார் மீட்டுள்ளனர் சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்தி , மேலதிக விசாரணைகளுக்காக 72 மணி நேரங்கள் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றில் பொலிஸார் அனுமதி கோரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.