மஹிந்த விலகல் உறுதி; வெளியானது அதிவிசேட வர்த்தமானி!
மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து விலகியமையை உறுதிப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத்தின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 47 - 2 - (ஆ) சரத்துக்கு அமைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று முதல் அமுலாகும் வகையில் பதவியில் இருந்து விலகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நேற்று மாலை அனுப்பியிருந்தார்.
பொது நலனுக்காக அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் எதிர்காலத்தில் மேலும் பாரிய தியாகங்களை செய்ய தாம் தயாராகவுள்ளதாகவும் அவர் தமது பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முன்மொழியப்பட்டுள்ள எந்தவொரு நடவடிக்கையின் மூலமும் நாடும் மக்களும் எதிர்நோக்கும் இன்னல்களுக்கு தீர்வு காண்பதே தமது ஒரே நோக்கமாகும் எனவும் மஹிந்த தனது கடிதத்தில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.