என்னைத் துரோகி என்று சொல்லிவிடுவார் என பயந்து உண்மையைச் சொல்ல பயப்பட்டதில்லை!
நாட்டில் என்னை யாராவது ஒருவர் துரோகி என்று சொல்லிவிடுவார்களா எனப் பயந்து உண்மையை சொல்வதற்கு நான் ஒருபோதும் பயப்பட்டதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (27-05-2024) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பிதிலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கவின் பயணத்திற்கு வடக்கு மக்கள் தடையாக இருந்திருக்கலாம் அதை இப்போதாவது வருத்தத்துடன் நினைவு கூர்வார்கள் என நினைப்பதாக ஐனாதிபதி ரணில் முன்னிலையில் நீங்கள் சில தினங்களிற்கு கூறியிருப்பது தொடர்பில் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியதற்கே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
குறித்த தேர்தலில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் தானே. ஆனாலும் கிழக்கு மாகாணம் வாக்களித்தது. கிழக்கு மாகாண மக்களுக்கும் இந்த அறிவித்தல் கொடுத்தாலும் அங்கு மக்கள் வாக்களித்தனர்.
ஏனென்றால் அதை அமுல்படுத்துகிற அதிகாரம் அந்தப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இருக்கவில்லை. ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் மக்கள் வாக்களிக்கவில்லை. இருப்பினும் ஒருசிலர் வாக்களித்தவர்கள் என நினைக்கிறேன்.
வாக்களித்த ஒரு சிலரும் அந்த நேரம் நூறுவீதம் ரணிலுக்கு தான் வாக்களித்தவர்கள். ஆனபடியால் மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்தால் யாருக்கு அந்த வாக்கு போயிருக்கும் என்பதில் எவருக்கும் எந்தவிதமான சந்தேகமும் இதுவரையில் இருந்த்தில்லை.
ஆனால் இன்றைக்கு ஊடகவியலாளர்கள் தான் இப்படியான சந்தேகத்தை எழுப்புகிறீர்கள். எல்லாருக்கும் தெரிந்த ஒரு விடயத்தை கதைப்பதற்கு பயந்து இதைச் சொன்னால் துரோகி என்று சொல்லிவிடுவீர்கள் என கருதி ஊடகவியலாளரே பயந்திருக்கிற ஒரு சூழலைத் தான் இன்றைக்கு இங்கு கேட்கிற கேள்வி காட்டுகிறதே தவிர எப்படி வாக்கு கொடுக்கப்கட்டிருக்கும் என்பது தொடர்பில் மக்களுக்கு மிகத் தெளிவு இருக்கிறது.
இருப்பினும், நான் எப்போதுமே யாராவது ஒருவர் என்னைத் துரோகி என்று சொல்லிவிடுவார் எனப் பயந்து உண்மையைச் சொல்வதற்கு பயப்பட்டதில்லை என்பதையும் கூறிக்கொள்கிறேன் என்றார்.