LPL போட்டி ஊழல் மீண்டும் வெளிச்சத்துக்கு ; நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்
கடந்த ஆண்டு நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற வீரர் ஒருவருக்குப் போட்டி நிர்ணயம் செய்ய அழுத்தம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட தம்புள்ளை தண்டர்ஸ் (Dambulla Thunders) அணியின் உரிமையாளரான தமீம் ரஹ்மானுக்கு எதிராக இன்று (12) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை பிரதிவாதியிடம் கையளிக்கப்பட்டது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பிரதிவாதியை ரூபா 2 இலட்சம் ரொக்கப் பிணை மற்றும் தலா ரூபா 100 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் அடிப்படையில் விடுவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

பிரதிவாதி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ, நீதிமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கையில்,
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதிவாதி பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார் என்று தெரிவித்தார்.
மேலும், பிரதிவாதி பிரித்தானிய குடியுரிமை கொண்ட ஒரு பங்களாதேஷ் பிரஜை என்றும், இந்த வழக்கின் காரணமாக அவர் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையிலேயே தங்க வேண்டியுள்ளதால், அவரது தனிப்பட்ட மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டார்.
எனவே, பிரதிவாதி இந்தக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டு, வழக்கைச் சுருக்கமாக முடித்துக்கொள்ள தயாராக இருப்பதாகவும், இது குறித்து சட்டமா அதிபரிடம் எழுத்து மூலமாகவும் வாய்மொழியாகவும் தாம் தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி கூறினார்.
இதற்குப் பதிலளித்த சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி, பிரதிவாதி சமர்ப்பித்த விடயங்கள் குறித்துச் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதற்காக ஒரு திகதியை வழங்குமாறு கோரினார். அதன்படி, இந்த வழக்கு மேலதிக விசாரணைக்காக டிசம்பர் மாதம் 8ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.