யாழ் தொழிலதிபருக்கு விமான நிலையத்தில் சம்பவம் செய்த தரகர் ; பறிபோன பல இலட்சங்கள்!
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் யாழ்ப்பாண தொழிலதிபரை ஏமாற்றி 1 மில்லியன் ரூபாய் பணத்தை பெற்று மோசடி செய்த தரகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருதாவது,

ரூ.1 மில்லியன் மோசடி
யாழ்ப்பாணம் பகுதியில் வசிக்கும் இரும்பு வாங்கும் தொழிலதிபர் ஒருவரை ராகம, எண்டேரமுல்ல பகுதியில் வசிக்கும் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிக அளவு இரும்பு தொகுதி இருப்பதாகவும், அதை வாங்குவதற்கான விலைமனு கோரலை சமர்ப்பிக்க ரூ.1 மில்லியனுடன் விமான நிலையத்திற்கு வருமாறும் கூறியுள்ளார்.
அதன்படி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தொழிலதிபர், ஒக்டோபர் 25 ஆம் திகதியன்று தனது மனைவியுடன் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்திற்கு வந்துள்ளார். இதன் போது அவர்களிடம் ஒரு மில்லியன் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்ட ராகமவைச் சேர்ந்த நபர் ஒரு மில்லியன் ரூபாயுடன் தப்பி ஓடியுள்ளார்.
பின்னர், யாழ்ப்பாண தொழிலதிபர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் முறைப்பாடளித்ததுடன் CCTV காட்சிகளில் சந்தேக நபரையும் அடையாளம் காட்டியுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு கேமரா அமைப்பின் பொறுப்பாளர், வெள்ளிக்கிழமை (21) அன்று காலை, ஏதோ ஒரு காரணத்திற்காக கம்பஹா மாவட்ட செயலகத்திற்கு சென்றிருந்தபோது, அந்த அலுவலகத்தில் தரகராக பணியாற்றி, விமான நிலையத்தில் மோசடியாக பணம் பெற்ற நபரை அடையாளம் கண்டு, உடனடியாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார்.
அதன்படி, உடனடியாகச் செயல்பட்ட பொலிஸார், கம்பஹா மாவட்ட செயலகத்திற்கு சென்று, ராகம, எண்டேரமுல்லவைச் சேர்ந்த 46 வயதுடையவரை கைது செய்து, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.