மாமன் - மருமகன் தகராறில் பறிபோன உயிர்
காலியில் தல்கஹவத்த பிரதேசத்தில் மாமனாரால் தாக்கப்பட்டு மருமகன் கொலை செய்யப்பட்டுள்ளதாக கரந்தெனிய பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று (07) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மொரகொட பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய மருமகனே கொலைசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
முச்சக்கர வண்டி கொடுக்க மறுப்பு
கொலைசெய்யப்பட்ட மருமகன் தனது வீட்டில் நண்பர்களுடன் இணைந்து மதுபானம் அருந்தியுள்ள நிலையில் மதுபோதையில் உள்ள நண்பர்களை அவர்களது வீடுகளுக்கு கொண்டுசென்று விடுவதற்காக மாமனாரிடம் முச்சக்கரவண்டியை கேட்டுள்ளார். ஆனால் மாமனார் தனது முச்சக்கரவண்டியை கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த மருமகன் பொல்லால் வீட்டின் கதவை அடித்து உடைத்து மனைவியை தாக்க முயன்றுள்ளார். மதுபோதையில் உள்ள மருமகனை தடுப்பதற்காக மாமனார் தனது மருமகனை பொல்லால் தாக்கியதில் காயமடைந்த மருமகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபரான 58 வயதுடைய மாமனார் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். மேலும் கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரந்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.