ஆதரவு கடிதம் உண்மையா? போலியா? ; தமிழக அரசியலில் நள்ளிரவில் வெளியான புதிய சர்ச்சை
சென்னை தமிழக அரசியலில் நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்திய வகையில், அமமுக எம்.எல்.ஏ எஸ்.காமராஜின் ஆதரவு கடிதத்தைச் சுற்றி தவெக மற்றும் டிடிவி தினகரன் இடையே கடும் சர்ச்சை வெடித்துள்ளது.
தவெக ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையை திரட்டும் முயற்சியில் இருக்கும் நிலையில், அமமுக எம்.எல்.ஏ காமராஜ் ஆதரவு அளித்ததாக ஆளுநரிடம் கடிதம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “காமராஜ் பெயரில் போலி கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது” என்று குற்றம்சாட்டி ஆளுநரை நேரில் சந்தித்து புகார் அளித்தார்.
மேலும், “எங்கள் எம்.எல்.ஏவை காணவில்லை. தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது” என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இதையடுத்து, எம்.எல்.ஏ காமராஜ் மக்கள் மாளிகையில் தோன்றி, “நான் அதிமுகவையே ஆதரிக்கிறேன். வெளியான கடிதத்தில் இருப்பது என்னுடைய கையெழுத்து அல்ல” என்று தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக கிண்டி காவல் நிலையத்திலும் டிடிவி தினகரன் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், தவெக தரப்பில் வெளியிடப்பட்ட வீடியோவில், காமராஜ் காரில் அமர்ந்து ஆதரவு கடிதத்தில் கையெழுத்திடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
“அவர் தன்னிச்சையாகவும் மகிழ்ச்சியுடனும் ஆதரவு தெரிவித்தார். பேரம் பேச வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை” என்று தவெக விளக்கம் அளித்துள்ளது.
இதனால், ஆதரவு கடிதம் உண்மையா? போலியா? என்ற விவகாரம் தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.