அக்குரேகொட சட்டத்தரணி கொலை விவகாரம் ; சகோதரர்கள் இருவரின் இரகசிய வாக்குமூலம்
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு சகோதரர்களும், கடுவெல நீதவான் அருண புத்ததாச முன்னிலையில் சுமார் ஒரு மணிநேரம் இரகசிய வாக்குமூலமொன்றை வழங்கியுள்ளனர்.
அத்துருகிரிய, ரதுவிலவத்த பாரடைஸ் பகுதியைச் சேர்ந்த சனோஜ் கோகில லியனாராச்சி மற்றும் நதுன் கவீஷ லியனாராச்சி ஆகிய இரு சகோதரர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இரகசிய வாக்குமூலம்
அவர்கள் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்னதாகவே இந்த இரகசிய வாக்குமூலத்தை வழங்கியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக 72 மணிநேர தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படும் 'பொல்கசோவிட்ட டிலா' என்பவர் பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
தலைமறைவாக உள்ள 'மோதரை நிபுண' என்பவரின் தரப்பினரால் கொட்டிக்காவத்தை பகுதியில் வைத்து டிலாவிடம் துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன.
பின்னர் டிலா மற்றும் விளக்கமறியலில் உள்ள இரு சகோதரர்களும் வாடகைக்கு எடுக்கப்பட்ட சிற்றூர்ந்து ஒன்றில் ஆயுதங்களுடன் அக்குரேகொட பகுதிக்கு வந்துள்ளனர். பிற்பகல் 3.30 மணியளவில் அக்குரேகொட பகுதிக்கு வந்த இவர்கள், துப்பாக்கிச் சூடு நடத்த வந்தவர்களிடம் ஆயுதங்களை ஒப்படைத்துள்ளனர்.
பின்னர் ரொபர்ட் குணவர்தன மாவத்தை ஊடாகச் சென்று, சட்டத்தரணி வரும் வழியைக் கண்காணித்து துப்பாக்கிதாரிகளுக்கு "இதோ இப்போது வருகிறார்கள்" என தொலைபேசி மூலம் தகவல் வழங்கியுள்ளனர்.

பொல்கசோவிட்ட டிலா என்பவர் டுபாயில் தலைமறைவாக உள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர்களான 'மல்வானே டுட்டு' மற்றும் 'மோதரை நிபுண' ஆகியோரின் நெருங்கிய நண்பர் எனத் தெரியவந்துள்ளது.
இந்த இரட்டைப் படுகொலைச் சம்பவம் கடந்த 13 ஆம் திகதி அக்குரேகொட முப்படைத் தலைமையகத்திற்கு அருகில் உள்ள பல்பொருள் அங்காடி வாகன தரிப்பிடத்தில் இடம்பெற்றது.
இக்கொலையுடன் தொடர்புடைய மேலும் மூவரைக் கைது செய்ய காவல்துறையினர் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.