இறப்பர் களஞ்சியசாலையில் பாரிய தீ விபத்து ; வாகனங்கள் மற்றும் உற்பத்தி பொருட்கள் நாசம்
களுத்துறை பகுதியில் அமைந்துள்ள இறப்பர் உற்பத்தி நிறுவனம் ஒன்றின் களஞ்சியசாலையில் இன்று திடீரென பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தீ விபத்து காரணமாக களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான இறப்பர் உற்பத்தி பொருட்கள் மற்றும் சொத்துக்களுக்குப் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை
களஞ்சியசாலையில் இருந்த இறப்பர் பொருட்கள் முழுமையாக அழிவடைந்துள்ளதுடன், அதற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு முச்சக்கர வண்டி மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள் ஆகியன தீயில் கருகி முற்றாக நாசமாகியுள்ளன.
களுத்துறை மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன்போது பொலிஸ் அதிகாரிகள், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பிரதேச மக்கள் ஒன்றிணைந்து தீயைக் கட்டுப்படுத்தப் பெரும் ஒத்துழைப்பை வழங்கினர்.
தீ அருகில் இருந்த வீட்டிற்கும் பரவும் அபாயம் காணப்பட்டதால், பொதுமக்கள் உடனடியாகச் செயற்பட்டு அந்த வீட்டிலிருந்த தளபாடங்கள் மற்றும் பொருட்களை அப்புறப்படுத்தினர்.
சம்பவம் தொடர்பாக களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.