குமார் சங்கக்கார பொதுமக்களுக்கு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை
இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார மீண்டும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனது பெயர் மற்றும் உருவத்தைப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பரப்பப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட முதலீட்டு மோசடிகள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ள அவர்,
தனது பழைய நேர்காணல்களைக் கொண்டு, AI தொழில்நுட்பத்தின் மூலம் போலியாக உருவாக்கப்பட்ட (Doctored Videos) காணொளிகள் முதலீட்டுத் தளங்களை விளம்பரப்படுத்தப் பயன்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

"எனது பெயரும் உருவமும் போலியான AI காணொளிகளில் பயன்படுத்தப்படுகின்றன, பொதுமக்கள் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும்," என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த மோசடிகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தான் ஏற்கனவே புகார் அளித்துள்ள போதிலும், இதுவரை முறையான பதில் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரபலங்களின் பெயரில் வரும் முதலீட்டு விளம்பரங்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தக் குறித்த காணொளி அல்லது விளம்பரம் சம்பந்தப்பட்ட பிரபலத்தின் உத்தியோகபூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிடப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் நீல நிறச் சரிபார்ப்பு அடையாளங்கள் (Blue Verification Badges) மற்றும் உத்தியோகபூர்வ இணையதள இணைப்புகளைச் சரிபார்க்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
சந்தேகத்திற்குரிய பதிவுகள் கண்டறியப்பட்டால், உடனடியாக காவல்துறை அல்லது சைபர் குற்றப்பிரிவிடம் (Cyber Crimes Division) முறையிடுமாறு குமார் சங்கக்கார கூறியுள்ளார்.
சமூக வலைதளங்களில் பரவி வரும் இவ்வாறான ஏமாற்று வேலைகள் குறித்துத் தற்பொழுது மீண்டும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.