கச்சத்தீவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலைகள்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இரண்டு நாடுகளின் அடையாள சின்னமாக விளங்கும் கச்சத்தீவு பகுதியிலுள்ள புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் என கச்சத்தீவு யாத்திரை தள பரிபாலகர் அருட்பணி வசந்தன் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார்.
கச்சத்தீவில் புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளமை தொடர்பான புகைப்படங்கள் வெளியான நிலையில் இந்த கோரிக்கையை அவர் விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கச்சத்தீவு என்றாலே தமிழக மக்களுக்கும் இலங்கை தமிழ் மக்களுக்கும் ஏன் அண்மைய காலமாக சிங்கள மக்களுக்கும் புனித அந்தோனியார் ஆலயம் மாத்திரமே ஞாபகத்துக்கு வரும்.
அந்தோனியாருக்காக அர்ப்பணிக்கப்பட்ட கச்சத்தீவு
எனவே கச்சத்தீவு அந்தோனியாருக்காக அர்ப்பணிக்கப்பட்ட தீவாக அது தொன்றுதொட்டு விளங்குகிறது. ஆனால் திட்டமிட்ட வகையில் அண்மைய நாட்களில் இரண்டு புத்த பெருமானின் சிலைகள் வைக்கப்பட்டதுடன் அரச மரக்கன்றுகளும் நாட்டப்பட்டுள்ளன.
யாருக்கும் தெரியாத வகையில் உயரமாக பனை ஓலைகளால் வேலியமைத்து அது மூடப்பட்டு காணப்படுகின்றமையை சில நாட்களுக்கு முன்னர் பார்த்த புகைப்படங்கள் மூலம் அறியக் கிடைத்தது.
எனவே எதிர்காலத்தில் வரலாற்றை திரிபுப்படுத்துவதற்கான முயற்சியே இது.
இவ்வளவு பெரிய புத்தர் சிலைகள் எதற்கு?
கச்சத்தீவில் புனித அந்தோனியார் ஆலயம் மட்டுமே இருக்கின்றது. அங்கு 7 தொடக்கம் 10 வரையான கடற்படையினர் கடமையாற்றுகின்றனர். அவர்கள் வழிபட சிறியதான புத்தர் சிலையை வைத்து வழிபடலாம்.
ஆனால் இவ்வளவு பெரிய புத்தர் சிலைகள் எதற்கு? அதை ஏன் மறைத்து வைத்திருக்க வேண்டும். கச்சத்தீவில் எந்தப்பகுதியிலும் அரச மரங்கள் இல்லை. ஆனால் திட்டமிட்ட வகையில் அரசமரங்கள் நாட்டப்பட்டுள்ளன.
வடக்கு, கிழக்கு தமிழர் பகுதியில் பௌத்த திணிப்பு திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றது. போருக்கு பின்னர் இன ஒற்றுமை பற்றி பேசப்படும்போது இவ்வாறான விடயங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.