இலங்கையர்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜப்பான்!
இலங்கையர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்க ஜப்பான் முன்னுரிமை வழங்குவதாக இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகொஷி ஹெய்டயாகி தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஜப்பானிய முதலீட்டாளர்களை இலங்கைக்கு ஈர்ப்பதற்கு முன்னுரிமை வழங்குவதாகவும் அவர் கூறினார்.
2022ஆம் ஆண்டில் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 70 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு கண்டியில் அமைந்துள்ள புனித தலதா மாளிகையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதன் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது சர்வதேச அலுவல்கள் அமைச்சின் செயலாளர் காமினி பண்டார, ஜப்பானிய தூதுவரை தலதா மாளிகையில் வரவேற்றார்.
அதன் பின்னர், தூதுவர் புனித சின்னத்துக்கு மரியாதை செலுத்தியதுடன், சிறப்பு விருந்தினர் புத்தகத்தில் குறிப்பு எழுதி நினைவுப் பரிசையும் வழங்கினார்.
மேலும் தலதா மாளிகையிலுள்ள சர்வதேச பௌத்த அருங்காட்சியகத்தில் உள்ள ஜப்பானிய கண்காட்சிக் கூடத்தையும் அவர் பார்வையிட்டார்.