வலிவடக்கில் பொலிஸாரால் கொள்ளையர்கள் குதூகலம்; கண்ணீர்விடும் உரிமையாளர்
யாழ் மாவடாத்தில் வலிகாமம் வடக்கில் , திருடர்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த 33 வருட காலமாக உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட காங்கேசன்துறை - மாங்கொல்லை பகுதியில் இருந்து கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் இராணுவத்தினர் வெளியேறி உள்ளனர்.
எனினும் குறித்த பிரதேசம் மக்களிடம் இராணுவத்தினரால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவில்லை. இதன் காரணமாக காணி உரிமையாளர்கள் அப்பகுதியில் குடியமர முடியாத நிலை காணப்படுகிறது.
பழைய இரும்புதானே -கண்டுகொள்ளாத பொலிஸார்
இந்நிலையில் அப்பகுதிக்குள் ஊடுருவும் இரும்பு திருடர்கள் வீடுகளில் உள்ள இரும்புகளை திருடி செல்வதாக பொது மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அது குறித்து தெல்லிப்பழை பிரதேச செயலர், காங்கேசன்துறை பொலிஸார் உள்ளிட்ட தரப்பினருக்கு பல தடவைகள் வீட்டு உரிமையாளர்கள் முறைப்பாடு செய்தும் திருட்டினை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இரும்பு திருடர்கள் சுதந்திரமாக அப்பகுதிகளில் நடமாடி திரிகின்றனர்.
திருட்டு தொடர்பில் பிரதேச செயலரிடம் முறையிட்டபோது, இராணுவத்தினர் உத்தியோகபூர்வமாக தம்மிடம் கையளிக்காத நிலையில் தாம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க முடியாது என தெரிவிக்கின்றார்.
பொலிஸாரிடம் முறையிட்டோருக்கு பொலிஸார் நடவடிக்கை எடுப்பதாக கூறிய போதிலும், கண் முன்னால் இரும்பு திருடர்கள் திருட்டில் ஈடுபடுகின்றபோது பொலிஸார் அதனை கண்டுகொள்ளவதில்லை எனவும் கூறப்படுகின்றது.
அது தொடர்பில் பொலிசாரிடம் கேட்ட போது , பழைய இரும்புகள் தானே அவர்கள் கொண்டு செல்லட்டும் என பொலிஸார் பதில் அளித்துள்ளதாகவும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.
கண்ணீர்விடும் உரிமையாளர்
தகவல் அறிந்து வீட்டு உரிமையாளர்கள் தமது காணிக்குள் வரும் போது, இரும்பு திருடர்கள் தம்மை புலனாய்வு பிரிவினர் என கூறி, இதற்குள் நீங்கள் வர கூடாது என அச்சுறுத்தி அனுப்பி விட்டு உரிமையாளர் முன்னாலையே வீடுகளை உடைத்து இரும்புகளை திருடி செல்கின்றனர்.
இது தொடர்பில் யாரிடம் இனி முறையிடுவது என தெரியாத நிலையில் தமது கண்களுக்கு முன்னால் தமது வீடுகளை உடைத்து திருடப்படுவதாக பாதிக்கபப்ட்டவர் வேதனை வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.