யாழ் பல்கலைக்கழக சமூகம் பாரிய கையெழுத்துப் போராட்டம் ; நீதி அமைச்சருக்கு பகிரங்க மனு
நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கவும், "பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும்" புதிய சட்ட வரைவை மீளப் பெறவும் வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகம் இன்று பாரிய கையெழுத்துப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.
பல்கலைக்கழக ஊழியர் சங்கம், ஆசிரியர் சங்கம் மற்றும் மாணவர் ஒன்றியம் ஆகியன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த அறப்போராட்டத்தின் ஊடாக, வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் சார்பில் நீதி அமைச்சருக்குப் பகிரங்க மனுவொன்று அனுப்பப்படவுள்ளது.

2024 ஆம் ஆண்டு தேர்தலின் போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகத் தேசிய மக்கள் சக்தி அளித்த வாக்குறுதியையும், 2025 ஆம் ஆண்டு செப்டம்பரில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரையொட்டி இந்த சட்டம் நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ள பல்கலைக்கழகச் சமூகம், தற்போது முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்ட வரைவு அந்த நிலைப்பாட்டிற்கு முரணாக உள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த மனுவின் ஊடாக, நடைமுறையில் உள்ள அடக்குமுறைச் சட்டங்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், அடிப்படை மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதிக்கும் எந்தவொரு புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் கொண்டு வரக்கூடாது என்றும் யாழ். பல்கலைக்கழகச் சமூகம் ஒருமித்த குரலில் வலியுறுத்தியுள்ளது.
எவ்விதக் கட்டுப்பாடுகளுமின்றி மக்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற பிரதான கோரிக்கையுடன் முன்னெடுக்கப்படவுள்ளது.