யாழில் பரபரப்பு ; உழவு இயந்திரத்தால் பொலிஸாரை மோதிய சம்பவம் குறித்து விசாரணை தீவிரம்
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை உழவு இயந்திரத்தால் மோதிக் கொலை செய்ததுடன், மற்றுமொரு உத்தியோகத்தருக்குப் படுகாயமேற்படுத்திய சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரதான சந்தேகநபர் தலைமறைவாக உள்ள நிலையில், அவரைத் தேடும் பணிகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கொடிகாமம், கெற்பேலி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த சனிக்கிழமை இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அங்கு சென்றுள்ளனர்.
இதன்போது, மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தைச் செலுத்தியவர், பொலிஸாரைக் கண்டதும் தப்பிச் செல்லும் நோக்கில் வேகத்தை அதிகரித்து அவர்கள் மீது மோதிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 50 வயதுடைய ஹெட்டியாராச்சி அல்பேர்ட் எனும் பொலிஸ் சார்ஜன்ட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் சென்ற மற்றைய உத்தியோகத்தர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், உழவு இயந்திரத்தின் உரிமையாளரை நேற்று (29) கைது செய்தனர்.
அவர் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சம்பவ தினத்தன்று சாரதிக்கு உதவியாளராகச் சென்ற இளைஞன் தலைமறைவாக இருந்த நிலையில், இன்று(30) பாலாவி பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞனிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
உழவு இயந்திரத்தைச் செலுத்திய பிரதான சந்தேகநபர் தொடர்ந்தும் தலைமறைவாக உள்ள நிலையில், அவரைப் பிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.