நாளையுடன் நிறுத்தப்படும் தமிழ்நாடு – யாழ் பயணிகள் கப்பல் சேவை!
இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இந்தியாவின் நாகைக்கும் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையானது நாளை வெள்ளிக்கிழமை (20) முதல் நிறுத்தப்படும் என இந்திய துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த 14 ஆம் திகதி தமிழ்நாட்டின் நாகபட்டினம் துறைமுகத்தில் இருந்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பித்ததது.
நாகை துறைமுக விரிவாக்கப் பணி
அதன்பின்னர் கப்பலில் பயணம் செய்ய முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், வாரம் முழுவதும் இயக்கப்படுவதற்குப் பதிலாக, திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் பயணிகள் கப்பல் சேவை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நாகையிலிருந்து பயணிகள் கப்பல் கடந்த 16 ஆம் திகதி 15 பயணிகளுடனும், 18 ஆம் திகதி 23 பயணிகளுடனும் காங்கேசன்துறைக்கு பயணித்தது.
இந்நிலையில், வடகிழக்குப் பருவ மழை எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீண்டும் ஜனவரி முதல் கப்பல் போக்குவரத்து
இதன் காரணமாகவும், இந்தியாவின் நாகை துறைமுக விரிவாக்கப் பணி காரணமாகவும், நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்குச் செல்லும் பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை வெள்ளிக்கிழமையுடன் (ஒக்.20) நிறுத்தப்படுகிறதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், நாளை 20 ஆம் திகதி காங்கேசன்துறைக்குச் செல்லும் பயணிகள் கப்பல், அங்கிருந்து கேரளாவின் கொச்சின் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
மேலும் மீண்டும் கப்பல் போக்குவரத்து அடுத்த ஆண்டு( 2024 )ஜனவரி முதல் தொடங்கும் என்றும் இந்திய துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.