யாழ். செம்மணி மனித புதைகுழி வழக்கு தொடர்பில் வெளியான தகவல்
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு நாளைய தினம் வியாழக்கிழமை யாழ். நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
குறித்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படும் போது, அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட பகுதிகளுக்கு மேலதிகமாக புதைகுழிகள் காணப்படுகின்றனவா என்பதை கண்டறியும் நோக்குடன் கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்ட ஸ்கான் நடவடிக்கையின் அறிக்கை , மண் பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட சில முக்கிய அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் கடந்த 07ஆம் திகதியுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 07ஆம் திகதி வரையில் கட்டம் கட்டமாக 41 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 133 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 147 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்தது.
இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளின் மூன்றாம் பகுதி அகழ்வு நடவடிக்கைகள் எதிர்வரும் 21ஆம் திகதியளவில் நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் , நாளைய தினம் வியாழக்கிழமை நடைபெறும் வழக்கு விசாரணைகளின் போது உத்தியோகபூர்வமாக திகதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.