யாழ் பிரபல பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அதிகாரிகள் இழைத்த அநீதி ; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
வேம்படி மகளிர் கல்லூரி மாணவர்களுக்கு நீதியை, நேர்மையை, நடுநிலையைப் போதிக்க வேண்டிய அதிகாரிகள், மாணவர்களின் திறமைகளில் நடுநிலையற்று செயற்பட்ட நிலையில், அதிகாரிகளுக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது.
அதிகாரிகள் மூவருக்கு, எதிராகத் தீர்ப்பு
அண்மையில் நடைபெற்ற மாகாண மட்ட தமிழ்த்தினப் போட்டி நிகழ்ச்சியில், பக்கச்சார்பாக நடந்து கொண்டமை தொடர்பாக, யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தால் வட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மூவருக்கு, எதிராகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த வழக்கு செலவினைச் செலுத்த வேண்டும் எனவும் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாகாண மட்டத் தமிழ்த்தினப் போட்டியின் சங்கீதப் போட்டியில், வேம்படி மகளிர் கல்லூரி இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டதுடன், ஹாட்லி கல்லூரி முதல் இடத்தினைப் பெற்றுக் கொண்டதாகவும் நடுவர் குழுவினால் அறிவிக்கப்பட்டது.
எனினும், சுற்றுநிருபத்தில் குறிப்பிட்டபடி ஹாட்லி கல்லூரி மாணவர்கள் பாடிய பாடலில் பதவர்ணம் காணப்படாததால், குறித்த போட்டியிலிருந்து அவர்களை தகுதி நீக்கம் செய்து, தமக்கு முதல் இடம் தரப்படல் வேண்டும் என்று வேம்படி மகளிர் கல்லூரி அதிபரால் மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கு மேன்முறையீடு செய்யப்பட்டது.
எனினும், போட்டி மேன்முறையீட்டு சபை தலைவர் மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் லாவண்யா, தமிழ்ப் பாட பிரதிக் கல்விப் பணிப்பாளர் கவிதா மற்றும் அப்போதைய மாகாணக் கல்விப் பணிப்பாளர் பிரட்லீ ஆகியோரால் குறித்த மேன்முறையீடு எவ்வித நடுநிலையான விசாரணைகளுமின்றி நிராகரிக்கப்பட்டது.
பிழைகளை மறைக்கப் பல முயற்சி
ஹாட்லி கல்லூரி சார்பாகப் பங்குபற்றிய அணியில், வட மாகாண கல்வித் திணைக்களத்தில் கடமை புரியும் இரண்டு பிரதிக் கல்விப் பணிப்பாளர்களின் பிள்ளைகள் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் ஒருவரின் பிள்ளை பங்கு பற்றியமையால் தான் இவ்வாறான பக்கச் சார்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதா என்ற சந்தேகம் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு எழுந்தது.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோரினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. குறித்த வழக்கு விசாரணை தொடங்கிய நாள் முதலே தமது பிழைகளை மறைக்கப் பல முயற்சிகளை மாகாணக் கல்வித் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டனர்.
எனினும், சட்டத்தரணிகள் வாதத்தால் நீதிமன்றம் மாகாணக் கல்வி அதிகாரிகள் லாவண்யா மற்றும் கவிதா ஆகியோரது செயற்பாடுகள் பக்கச்சார்பாகக் காணப்படுவதாக தமது தீர்ப்பில் கூறியதுடன், இனிவரும் காலங்களில் மாணவர் சார்பாக நடைபெறும் எந்தப் போட்டி நிகழ்ச்சிகளிலும் இவர்கள் பணியாற்றக் கூடாது எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்ததுடன் வழக்கு செலவு யாவும் இவர்களால் செலுத்தப்படல் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, மேற்படி விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்து, எதிர்வரும் காலங்களில் மாணவர்களின் போட்டிகளில் பக்கச்சார்பான தீர்மானங்களை மேற்கொள்வதைத் தடைசெய்ய வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் கூறியுள்ளது.
மேலும், நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற அதிகாரிகளுக்கு எதிராக அரச நிர்வாக விதிகளுக்கு அமையத் தண்டனை வழங்கப்படல் வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோகள் வலியுறுத்தியுள்ளனர்.