யாழ்.செம்மணியில், தமிழர் அழிவின் சாட்சி; சிறிதரன் வலியுறுத்து
யாழ்ப்பாணம் செம்மணி அகழ்வில் சர்வதேச நிபுணத்துவக் கண்காணிப்பு அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழர்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டமையின் வடிவமே செம்மணி என அவர் குறிப்பிட்டார்.
செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானப்பகுதியில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகளைப் பார்வையிடுவதற்காக நீதிமன்ற அனுமதியைப் பெற்றுக்கொண்டதன் அடிப்படையில், சிறிதரன் அங்கு சென்றிருந்தார்.
குறித்த அகழ்வுப் பணிகளைப் பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்திருக்கையில் அவர் இவற்றைக் கூறினார்.
மனிதப்புதைகுழியின் அகழ்வுப்பணிகளில் சர்வதேச நிபுணத்துவக் கண்காணிப்பு அவசியமானது என்பதுடன், ஸ்கேனிங் இயந்திரம் உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்ப உபகரணங்களின் உதவியோடு அப்பகுதியில் முழுமையான அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
1995 ஆம் ஆண்டிலிருந்து 2001 ஆம் ஆண்டு வரையும் முழுக்க முழுக்க இராணுவ முகாமாகவும், இராணுவக் கட்டுப்பாட்டு வலயமாகவும் கையகப்படுத்தப்பட்டிருந்த செம்மணிப் பகுதியில் இனங்காணப்படும் மனித என்புத் தொகுதிகள் சாதாரணமாகப் புதைக்கப்பட்டவை தான் என்று கூற முற்படுவது மிக அபத்தமானது.
இந்துக்களின் சடங்குமுறையில் உடலங்களைக் கூட்டாக அடக்கம் செய்வதோ, ஆடைகளற்று அடக்கம் செய்வதோ பின்பற்றப்படுவதில்லை.
அவ்வாறிருக்க ஒரு இனத்தின் பலதசாப்தகாலப் போராட்டத்துக்கான சாட்சியமாக அணுகத்தக்க முக்கியத்துவம் மிக்க விடயமொன்றை மடைமாற்றும் செயற்பாடுகளில் சிலர் ஈடுபடுகிறார்கள்.
அத்தகைய செயற்பாடுகளைக் கடந்து, செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வுப்பணிகள் முழுமையாக நடைபெற்று உண்மைகள் கண்டறியப்படுவதற்காக, சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளின் கவனத்தைக் கோரும் நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் மேற்கொள்வோம் என சிவஞானம் சிறிதரன் கூறினார்.